‘ஒரு புதிய அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம்’: சிவசக்தி ஆனந்தன் கருத்து

0 1 'ஒரு புதிய அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம்': சிவசக்தி ஆனந்தன் கருத்து

ஒரு புதிய அரசியல் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,  இந்தத் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியநேத்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 இலட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள  விருந்தினர் விடுதியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான பிரச்சாரத்தைத் திட்டமிடும் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் 30க்கும் குறையாத  பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கட்சி சார் அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் பங்கு பற்றினார்கள்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, பிரச்சாரப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் ஒரு பெரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. நாளை  செவ்வாய்க்கிழமை வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பிரச்சாரப் பணிகளை தீவிரமாக முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த  கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,

கடந்த  ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தென்னிலங்கையைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் காட்டிய அந்த நல்லிணக்க செய்தியை ஆட்சியில் இருந்த எந்த ஜனாதிபதிகளும் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வையோ அல்லது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை பிரச்சனையையோ  இதுவரை காலமும் தீர்க்கவில்லை.

ஆகவே அந்த அடிப்படையிலே நாங்கள் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். இதற்கான தேர்தல் பிரச்சாரம் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டவிருக்கின்றது.

வடக்கு கிழக்கிலே 12 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் உள்ளார்கள். அதில் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறுவதற்கான பணிகளை நாங்கள் ஆரம்பித்து இருக்கின்றோம்.

நிச்சயமாக இந்த தேர்தலிலே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு மற்றும் அரசியல் ரீதியான மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.  இதில் 50 வீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

உண்மையில் நீண்ட காலமாக தமிழ் மக்களுக்கு ஒரு தேசிய இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றது. இதுவரை காலமும் தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதிகள் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினையை தீர்க்கவில்லை என்கின்ற ஒரு செய்தியை நாங்கள் சொல்ல முனைகிறோம். இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் வரைக்கும் தெற்கில் இருக்கின்ற எந்த ஒரு சிங்கள வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்ற செய்தியையும் கூறுகின்றோம்.

யுத்தம் முடிந்த பிற்பாடு தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று  சர்வதேச நாடுகள் உறுதியளித்திருந்தன.

யுத்தம் முடிந்து 15 ஆண்டு காலமாகியுள்ளது.   ஆனால் சர்வதேச நாடுகளும் தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இலங்கை அரசாங்கமும் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆகவே தமிழ் மக்களுக்கு ஒரு தேசிய இன பிரச்சனை ஒன்று இருக்கின்றது. ஒரு புதிய அரசியல் மாற்றத்தை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

குறித்த கலந்துரையாடலில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி வர்த்தக பிரமுகர்கள் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் சிவில் அமைப்புகளின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.