ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் வங்கதேசத்தின் பிரதிநிதியாக அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை அடுத்து, அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி சென்றார். இதையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், வங்கதேசத்தின் தலைமை ஆலோசகராக பதவியேற்றார்.
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வங்கதேசத்தின் சார்பில் பங்கேற்க முகமது யூனுஸ் வந்துள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான வங்கதேசத்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷேக் ஜமால் ஹுசைன் கூறுகையில், “டாக்டர் முகமது யூனுஸ் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக, சட்ட விரோதமாக அதிகாரத்தை கைப்பற்றியவர். கறைபடிந்த அரசியலுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளார். இதனால், ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். வங்கதேச மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யவில்லை. நாங்கள் ஐ.நா.வை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். முகமது யூனுஸ் இங்கு வங்கதேச மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என தெரிவித்துள்ளார்.