எல்லை தாண்டி கைதான தமிழக மீனவருக்கு 14 மாத சிறைத்தண்டனை

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 பேர்களில் ஒருவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அனலை தீவு கடற்பகுதியில் கடந்த 23ஆம் திகதி இரண்டு படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு மறுநாள், கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது 12 கடற்தொழிலாளர்களில் ஒருவர் கடந்த ஒரு வருட காலத்திற்குள் இரண்டு தடவைகள் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டவர் என மன்றில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் கைதான ஏனைய 11 மீனவர்களும் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டனர்.

அதேவேளை குறித்த கடற்தொழிலாளர்கள் பயணித்த இரு படகுகளில் ஒரு படகின் உரிமையாளரும் கைதாகி மன்றில் முற்படுத்தப்பட்டு இருந்தமையால் அவரது படகு அரசுடமை ஆக்கப்பட்டது.

மற்றைய படகு உரிமையாளர் மன்றில் பிரசன்னம் ஆகாதமையால் , படகு மீதான வழக்கு விசாரணைக்கு மே மாதம் 08ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளது.