எம்மைப் பற்றிப் பேசுவதை நிறுத்துங்கள்: சம்பிக்கவை எச்சரித்த மகிந்த

“விபத்து தொடர்பான வழக்கில் தான் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டார். உண்மைச் சம்பவங்களை மறைத்தமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டார். இந்தக் கைது, அரசியல் பழிவாங்கல் அல்ல. நீதித்துறையின் உத்தரவுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டார்” என சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

“தற்போது பிணையில் வெளிவந்த சம்பிக்க ரணவக்க, எம்மைப் பற்றி தவறாகச் சித்திரித்து உளறுவதை உடன் நிறுத்தவேண்டும். குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதித்துறையின் முன் நிறுத்தப்பட்டுத்தண்டிக்கப்படுவார்கள். கைது செய்வதும், தண்டனை கொடுப்பதும் நீதித்துறையின் வேலை. அது அரசின் வேலை அல்ல.

எமக்கு எவரையும் அரசியல் ரீதியில் பழிவாங்கவேண்டிய அவசியம் இல்லை. நாம் மக்களின் ஆணையின் பிரகாரமே மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளோம். மக்கள் ஆணைக்கு மதிப்பளித்துச் செயற்படுவதே எமது நோக்கம்” என்றார்.