எட்கா ஒப்பந்தம் கைச்சாத்தானால் நாட்டில் இலங்கையர் சிறுபான்மையாவர் – எச்சரிக்கிறாா் விமல் வீரவன்ஸ

மார்ச் மாதம் ‘எட்கா ஒப்பந்தம்’ கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இலங்கையர்கள் இலங்கையில் சிறுபான்மையினராக மாறுவர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

9ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையின் தலைவிதி என்ற தொனிப்பொருளில் கடுவெல கொஸ்வத்தையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விமல் வீரவன்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மார்ச் மாதத்துக்குப் பிறகு, எந்தவோர் இந்தியனும் சுதந்திரமாக வேலைக்காகவும் வர்த்தகத்துக்காகவும் இலங்கைக்கு வர முடியும். சில காலத்துக்குப் பிறகு, இலங்கை இந்தியர்களால் நிரம்புவது தவிர்க்க முடியாதது. அன்றிலிருந்து இலங்கையில் இலங்கையர்கள் சிறுபான்மையினாவர்.

நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ள இத்தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் இறையாண்மையை பலிகொடுத்து வருகிறார். இந்த பாவ நடவடிக்கைக்கு தினேஷ் குணவர்தனவும், ராஜபக்ஷவும் துணை புரிகின்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்.