ஊமைத் தேர்தலை நடாத்தி முடிக்க முயற்சிக்கக் கூடாது: ராஜபக்ச அரசுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவிப்பு

ஊமைத் தேர்தலை நடாத்தி முடிக்க முயற்சிக்கக் கூடாது ராஜபக்ச அரசுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போதைய கொரோனா சூழலில் மக்கள் பாரிய உளவியல் பொருளாதார தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்கள் தங்களுக்கான வைத்திய தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ளப்பயந்து வீடுகளில் முடங்கியிருக்கிறார்கள்

இப்படி இருக்கும் தருணத்தில் மீண்டும் மீண்டும் அனைத்து அரசியல் கட்சிகளாலும் பொதுநல சேவைகள் சம்பந்தப்பட்டவர்களாலும் தேர்தலை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டும் தாங்கள் நினைத்தது போல் தேர்தல் திணைக்களத்தின் மீது கடுமையான அழுத்தத்தை பிரியோகித்து அரசியல் யாப்பின் சரத்துக்களையும் சுட்டிக்காட்டி மஹிந்த ராஜபக்ச தான் கூறியது போல் ஜீன் 20 திகதியை குறிப்பிட்டு தேர்தலை ஒத்தி வைத்திருக்கிறார்கள்

ஜீன் இருபது தேர்தல் நடத்துவதாக இருந்தால் இன்றைய நிலமையிலேயே நாடு சுமூகமான நிலையில் இருந்திருக்க வேண்டும். இந்த கடைசி ஒரு வாரம் காலத்தில் கூட 100 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டனர். எனவே கொரோனாவின் கோரத் தாண்டவம் இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்பது வெளிப்படையாக உள்ளது

ஜனநாயக விழுமியங்களை தாங்கிய ஒரு தேர்தலை நடத்தாது ஊமைத் தேர்தலை நடாத்தி வென்றுவிட முடியும் என்று மனப்பால் குடித்து வருகிறார்கள் ராஜபக்ச ஆட்சியினர்.

ஒரு தேர்தல் நடத்துவதாக இருந்தால் அந்த தேர்தலுக்கான சகல பிரச்சாரங்களும் எமது நாட்டுக்கு ஏற்ற வகையில் எமது மக்களுடன் சுதந்திரமாக அனைத்து இடங்களிலும் சென்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஒரு தேர்தலில் பங்கு பற்றக் கூடிய நிலமை உருவாக்கப்பட வேண்டும். அப்படியாக இல்லாமல் தங்களது வறட்டுக் கௌரவங்களையும் தங்களது சுய தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஒரு ஊமைத் தேர்தலை நடத்துகிறார்கள் என்பது வெளிப்படையாக உள்ளது.

இவ்வளவு மோசமான சுகாதார நிலமை காணப்பட்ட போதும் சுகாதாரத்திற்கு பொறுப்பானவர்கள் கூட தேர்தலில் நாங்கள் ஒத்துழைப்பதாக போலிக்கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

கொழும்பும் கொழும்பை அண்டிய பிரதேசங்களும்
அவஸ்தைப்படும் பொழுது சிலர் ஏதோ தாங்கள் சாதித்து விட்டது போல் பாசாங்கு செய்கிறார்கள்.

அரசியல் யாப்பு ரீதியில் இதை அனுகாமல் அதற்கு முரண் நடையை கடைப்பிடித்த தேர்தலை நடாத்தி முடிக்க கங்கனம் கட்டி நிற்பது தெரிய வருகிறது

வேட்பாளர்கள் மக்களின் வீடுகளுக்கு சென்று தங்களின் கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்கக் கூடிய ஒரு சூழல் ஏற்படும் வரை ஒரு ஜனநாயக தேர்தல் இங்கு சாத்தியமற்றது

எனவே நாட்டு மக்களின் நன்மை கருதி கொரோனா அச்சம் இந்த தீவில் முடிவுக்கு வரும் வரை தேர்தல் நடத்தும் எண்ணத்தை அரசு கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.