உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நோக்கி அணி திரளுங்கள் – புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நோக்கி மக்களே அணிதிரளுங்கள் என்று புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னிமாவட்ட செயலாளர் என். பிரதீபன் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் இன்றைய அபாயகரமான சூழலை எமது கட்சி கருத்திற்கொண்டு ஏனைய இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பொது அமைப்புகளின் ஒருமித்த தீர்மானத்திற்கமைய, வேகமாகப் பரவிவரும் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பினைக் கருத்திற்கொண்டும் மே தினப் பேரணியையும் கூட்டத்தையும் நிறுத்தியிருந்தது.

இப்பேரிடர் காலத்தில் கோட்டாபய, மஹிந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தலையீடு இலாப வெறிக்காக இயற்கை வளங்களைச் சூறையாடல் உரிய சுகாதார வசதிகளை கட்டமைக்காமை என்பவற்றை உடனடியாக சீர் செய்ய வேண்டும். என்பதுடன் இனி வரும் காலப்பகுதியில் அரசியல் இலாப நோக்கம்கருதிய களியாட்ட அரசாங்க நிகழ்ச்சி நிரல்களுக்கும், ஒன்றுகூடல்களுக்கும் அனுமதி வழங்கும் நடைமுறையையும் தவிர்க்கவேண்டும் என்பதையும் கட்சி வலியுறுத்திநிற்கின்றது.

அத்துடன் அனைத்து அடக்கு முறைகளையும் இல்லாமல் செய்வதற்கு  உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நோக்கி அனைத்துமக்களும் அணிதிரளுமாறு குறித்த அறிக்கையில் உள்ளது.