உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 155,976 பேர் புதிய வாக்காளர்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை 1 கோடியே 72 இலட்சத்து  96,330 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர். இவர்களில் 155,976 பேர் முதல் தடவையாக வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு தேருநர் இடாப்புக்கு அமைவாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் நடைபெற்றன. இவ்விரு தேர்தல்களிலும் 17,440,354 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றிருந்தனர்.

2024 ஆம் ஆண்டு தேருடர் இடாப்பின் பதிவுகளுடன், இம்முறை 155,976 பேர் புதிதாக வாக்களிக்க இம்முறை தகுதிப்பெற்றுள்ளனர்.இதற்கமைய இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 17,296,330 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும்  திங்கட்கிழமை (17) தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தலுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் நிறைவடையவுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்கு குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துகின்ற நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் கட்டுப்பணம் செலுத்தல் நிறைவடைகிறது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் வியாழக்கிழமை (20) ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு  35 நாட்களுக்கு குறையாமல், 49 நாட்களுக்கு அதிகரிக்காமல்  பிரசார காலம் வழங்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மே  மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்  நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.