உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை; சிக்குவாரா மைத்திரி? – சகாக்களுடன் அவசர ஆலோசனை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கொழும்பில் முகாமிட்டு கட்சி சகாக்களுடன் முக்கிய சந்திப்புகளை நடத்திவருகின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது. குறித்த அறிக்கையில் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு தவறியமை, கடமையை நிறைவேற்றத் தவறியமை மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக் கூறவேண்டிய அரசியல்வாதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டபோது பாதுகாப்பு அமைச்சராகவும் முப்படைகளின் தளபதியாகவும் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அடங்குகின்றார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சு.கவின் அவசரமத்திய செயற்குழுக் கூட்டத்தை மைத்திரிபால சிறிசேன நேற்று முன் தினம் கூட்டினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கை மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் உட்பட சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.