ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் துரிதமாகக் கைதாவர் – அமைச்சர் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கையின் பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் துரிதமாகக் கைதுசெய்யப்படுவர்.

இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் –

“குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டனர்.

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவியமை, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியமைக்காக இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் நீண்ட காலமாக விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

அந்த விசாரணை அறிக்கைகளின் எட்டுப் பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டன. இந்த அறிக்கைகளில் குற்றவாளிகளாகப் பெயரிடப்பட்டுள்ள அனைவரையும் கைதுசெய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது” என்றார்.