ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவுநாள் நேற்று (19) இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
யாழில் இன்றைய நாளில் சுட்டுக்கொல்லப்பட்ட மயில்வாகனம் நிர்மலராஜனின் நினைவு தினத்தினை அடிப்படையாக கொண்டு இந்த நாளை ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவுநாளாக பிரகடனப்படுத்தி நடாத்திவருகின்றது.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடுசெய்தநிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள ஊடகவியலாளர்நினைவுத்தூபியருகே நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்;.செல்வராஜா உட்பட ஊடகவியலாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது படுகொலைசெய்யப்பட்ட மயில்வாகனம் நிர்மலராஜனின் உருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வடகிழக்கு உட்பட படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.நிலாந்தன் ஆகியோரினால் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன.