இலங்கையில் முஸ்லிம்கள் விவகாரங்கள் துறை அமைச்சின் கீழ்
2,272 இஸ்லாமிய கல்வி நிலையங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கிவருவதாகவும் மேலும் நூற்றுக்கணக்கான இவ்வாறான நிலையங்கள் தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.இவற்றில் 1,675 குரான் மத்ரசாக்கள்,318 அரபுக் கல்லூரிகள் ,279அகடியா பாடசாலைகள் அடங்குகின்றன.
இந்நிலையில், முஸ்லிம்கள் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் மத்ரசாக்களை (இஸ்லாமிய கல்விக் கூடங்கள்) இனி கல்வித்துறையின் கண்காணிப்பில் கொண்டு வரப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இலங்கை அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் சம்மதத்துடன் இதை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், இலங்கையில் இஸ்லாமிய சட்ட (ஷரியா) பல்கலைக்கழகம் அமைக்கவும் அனுமதி அளிக்க முடியாது. இதற்கான அதிகாரம் எங்கள் கையில் கிடையாது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இயங்கிவரும் மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழத்துக்கு இனி மட்டக்களப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யவும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை விசாரித்த உண்மை கண்டறியும் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
எனவே, பட்டப்படிப்புக்கான பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இனி அனுமதி அளிக்கும் வகையில் கல்வித்துறையில் சட்டத்திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.