இலங்கையில் முகக்கவசம் அணிதல் கட்டாயமாகிறது

வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக் கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வருவதுடன் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களையும் பொது மக்கள் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுவருகின்றனர் இதன் அடிப்படையின் முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டத்தின் போது, சிறிலங்கா காவல்துறை அனுமதியுடன் வீதிகளில் பயணிக்கும் அனைவரும் முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அனைத்து சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்நிலையங்களுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்..

ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் பெற்று கொண்டிருத்தாலும் அல்லது வீதிகளில் பயணிப்பதற்கு வேறு அனுமதி பெற்றிருந்தாலும் அவற்றினை கருத்திற்கொள்ளாமல் முகக் கவசம் அணிவதை வலியுறுத்தும் உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பதில் சிறிலங்கா காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்..

வாகனங்களில் பயணிப்போர் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.