இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600 ஐக் கடந்துள்ளதாக  அரசாங்கத் திணைக்களம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மேலும் நால்வர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதனால் கொரோனாத்தொற்றினால் இதுவரையில் இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 95 ஆயிரத்து 394 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்றாலும் இது மூன்றாவது அலையின் தோற்றமாக கருத முடியாது என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரித்தமையை சுட்டிக்காட்டிய அவர், அது மற்றொரு அலையின் அவசரநிலை என கருத முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் தொற்றுகள் பதிவாகியிருப்பதே ஒரு நாளைக்கு 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.