இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் நீண்டகாலமாக கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்ட காணியில் 50 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.

முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோறன்ஸ் லியோ தலைமையில் நடைபெற்ற குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில், பிரதம வருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை கலந்துகொண்டார்.

மேலும் விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை அடிகளார், கறிற்றாஸ் செடே தேசிய நிலையத்தின் இயக்குநர் அருட்தந்தை மகேந்திர குணதிலக்க, மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதைய இயக்குநர் அருட்தந்தை எஸ். அன்டன் அடிகளார், மன்னார் மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.குணபாலன், முசலி பிரதேசச் செயலாளர் வசந்தகுமார், என பலரும் கலந்து கொண்டனர்.

முள்ளிக்குளம் கிராமத்தில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 11 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. குறித்த வீடுகள் ஒவ்வொன்றும் தலா 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.