வவுனியாவில் சட்டவிரோத மரங்களை கடத்திச் சென்ற வாகனம் மோதியதில் இரண்டு இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,
ஏ9 வீதியில் இருந்து வவுனியா நோக்கி மரங்களை ஏற்றிசென்ற வாகனத்தினை ஓமந்தை நகர்பகுதியில் அமைந்துள்ள சோதனைசாவடியில் கடமையில் இருந்த இராணுவத்தினர் வழிமறித்துள்ளனர்.
இதன்போது மரக்கடத்தல்காரர்கள் வாகனத்தினை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதுடன் கடமையில் இருந்து இராணுவத்தினர் மீதும் மோதியுள்ளனர். இதனால் நீண்டதூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் மற்றொரு சிப்பாயும் காயங்களிற்குள்ளாகியுள்ளார்.
மரங்களை கடத்திச்சென்ற வாகனம் வீதிக்கரையில் விபத்திற்குள்ளாகி நின்றதுடன், அதன் சாரதி தப்பித்துசென்றுள்ளார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.