இனி நாடாளுமன்ற அமர்வுக்கு பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் துவிச்சக்கர வண்டியில் வருவார்கள்-இம்ரான் 

எரிபொருள் விலையேற்றத்தால் அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு பிரதமர் தலைமையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  துவிச்சக்கர வண்டியில் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்  தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் எரிபொருள் விலையேற்றம்  தொடர்பில் மேலும்  தெரிவிக்கையில்,

கடந்த  அரசு காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்துக்கமைய நியாயமான எரிபொருள் விலையேற்றம் இடம்பெற்ற போது அதற்கெதிராக தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் நாடாளுமன்ற அமர்வுக்கு துவிச்சக்கர வண்டியில் வருகை தந்தனர்.

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் கஷ்டங்களை அனுபவிப்பதாகவும், அந்த விலையேற்றத்தை எதிர்த்தே துவிச்சக்கர வண்டியில் நாடாளுமன்றம் வந்ததாகவும் அப்போது  அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அன்று மக்களுக்காக துவிச்சக்கர வண்டி மற்றும் மாட்டு வண்டிகளில் நாடாளுமன்றம் வந்தவர்கள் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அதனைச் செய்வார்களா என்பதைக் கேட்க விரும்புகின்றேன். இவர்களது ஏமாற்று அரசியல் குறித்து அடுத்த நாடாளுமன்ற அமர்வு வரை மக்கள் பொறுத்திருந்து பார்க்க முடியும்” என்றார்.