இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி -9

9. நெடுங்கேணிச் சந்திப் படுகொலை 11 நவம்பர் 1987

வவுனியா மாவட்டத்தின் வடக்கே அமைந்துள்ள வவுனியா வடக்குப் பிரதேசசெயலர் பிரிவின் பிரதான நகரமாக நெடுங்கேணி உள்ளது. இங்கு வாழ்கின்ற மக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தையும் கூலித்தொழிலையுமே பிரதான தொழிலாகக் கொணடு வாழந்து வந்தார்கள.

1987ஆம் ஆணடு, அக்டோபரில் விடுதலைப்புலிகளிற்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் மோதல் தொடங்கிய பின் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, தண்ணீரூற்றுப் போன்ற பிரதேசங்களில் இந்திய இராணுவத்தின் இராணுவ நடவடிக்கை நடைபெற்ற போது, அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெருமளவானோர் இடம்பெயர்ந்து நெடுங்கேணியிலும் தஞ்சம் புகுந்தனர்.

இவ்வாறு தஞ்சமடைந்த மக்கள் பாடசாலைகள், கோயில்கள், பொதுஇடங்கள் என்பவற்றில் தங்கினார்கள். மக்கள் செறிவாகத் தங்கியிருந்த கட்டிடங்கள் மீது இந்திய இராணுவத்தின் உலங்குவானூர்திகள் நடத்திய றொக்கற் தாக்குதலில் பதினைந்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன்,இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்தனர். நெடுங்கேணி, மாறாஇலுப்பையைச் சேர்ந்ந்த்த ட. தவமணி சம்பவம் பற்ற்றி விபரிக்கையில்,

“என்னுடைய மகள் நந்தினிக்கு சுகயீனம் என்ற காரணத்தால் நெடுங்கேணி வைத்தியசாலையில் தங்கி நின்று சிகிச்சை பெறவேண்டி வந்தது. அதனால் நானும் அங்கு நின்றிருந்தேன். அன்றைய தினம் மாலை 5 மணியிருக்கும் இந்திய இராணுவத்தின் எம்.ஐ.ரக உலங்குவானூர்தி ஒன்று வைத்தியசாலையைச் சுற்றி வந்தது. அங்கு கூடி நின்ற மக்கள் அனைவரும் வைத்தியசாலை எனபதால், குண்டு போடமாட்டார்கள் என்ற எண்ணத்தில் வைத்தியசாலைக்குள் ஓடி வந்தார்கள். அதை அவதானித்த உலங்குவானூர்தி வைத்தியசாலையின் முன்பக்கத்தில் குண்டுகளை வீசியது. இதனால் குண்டுச் சன்னங்கள் எங்கும் பட்டு கண்ணாடி யன்னல்கள் அனைத்தும் நொருங்கி வீழ்ந்தது. அந்த நேரந்தான் எனக்குத் தலையிற் காயம் பட்டது.

இதன்போது காயமடைந்தவர்கள் விழ ஏனையோர் கலவரப்பட்டு ஓடினார்கள். மகளைக் கூட்டிக்கொண்டு பின்புறமாக ஓடலாமென எத்தனித்தபோது மகளின் காலால் இரத்தம் வழிவதை அவதானித்தேன். அத்துடன் மகளும் மயக்கமுற்று வீழ்ந்துவிட்டார். பின்னர் துணைக்கு எவரும் இல்லாத நிலையில் கையில் அகப்பட்ட துணியால் நானே மகளின் காலுக்குக் கட்டுப்போட்டதுடன்,எனது காயத்திற்கும் கட்டுப் போட்டேன்.

வைத்தியசாலையிலிருந்த மருத்துவர்கள் அனைவரும் பாதுகாப்புத் தேடி ஓடிவிட்டதால் மருந்து கட்டக்கூட ஒருவரும் இருக்கவில்லை. இதனால் தனியார் மருத்துவமனை வைத்தியரின் உதவியுடன் இரவு 10.00 மணியளவில் எங்களுக்கு மருந்து கட்டப்பட்டது. அதன்பின்னர் அடுத்தநாள் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டிருந்ததால்,வாகனங்கள் எதுவும் இருக்கவில்லை. பின்னர் பயணிகள் பேருந்து ஒன்றின் மூலமாக வவுனியா மருத்துவமனையிற் சேர்க்கப்பட்டோம். அதன் பின்னர் மூன்று மாதங்கள் தங்கிச் சிகிச்சை பெற்றோம்.

தற்போது கூட எனது தலையில் குண்டுச் சன்னம் உள்ளதால் பெரியளவில் ஒருவித வேலையும் செய்யமுடியாதுள்ளது. அதேபோன்று தான் மகளின் நிலையும் உள்ளது. மேற்படி சம்பவத்தின்போது நெடுங்கேணி வைத்தியசாலையில் நின்றிருந்த பதினைந்து பேர் இறந்தனர்ää இருபத்தைந்து பேர் காயமடைந்ததாகக் கேள்விப்பட்டோம்.”

இச்சம்பவம் தொடர்பாக முள்ளியவளையைச் சேர்ந்த சிவராசா யோகரத்தினம் தெரிவிக்கையில்,

“1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் தண்ணீரூற்று முள்ளியவளைப் பிரதேசத்தில் தாக்குதல்களை மேற்கொண்ட நேரத்தில் அங்கிருந்த மக்கள் பீதி காரணமாக இடம்பெயர்ந்துகொண்டிருந்தார்கள். அந்த நேரம் எமது கிராமசேவையாளராக இருந்த சிதம்பரப்பிள்ளைக்கு உதவியாளராகக் கடமையாற்றிக்கொண்டிருந்தேன். அந்தவேளை இடம்பெயர்ந்த மக்களுக்கு எங்களால் முடிந்த வாகன உதவிகளைச் செய்து நெடுங்கேணிக்குககொண்டுசென்று பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் தங்க வைத்து நிவாரணப் பணிகள் செய்துகொண்டிருந்தோம்.

அன்றையதினம் மாலை 5.00 மணியிருக்கும் இந்திய இராணுவத்தின் முதலைக் கெலி என்றழைக்கப்படும் எம்.ஐ.24 ரக உலங்குவானூர்தி வானத்திற் சுற்றிக்கொண்டிருந்தது.இதனாற் பயமடைந்த நாங்கள் பாதுகாப்புத் தேடி ஒளிந்துகொண்டோம். அந்த நேரம் நெடுங்கேணி உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்கு முன்னால் முதலாவது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளபப்ட்டது.

அதன்போது இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்காக அகப்பை வாங்க வந்த எமது பகுதி இலங்கை போக்குவரத்துக் கழக பேருந்துச் சாரதியான பொன்னம்பலம் இராமநாதன் என்பவர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார்.

நெடுங்கேணி உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வேலை செய்த மகாதேவன் என்பவரின் மகன் மகேந்திரன் ஒரு உழவு இயந்திரத்தில் வந்துகொண்டிருந்தார். அவரும் அவ்விடத்திலேயே மரணமானார்.

அதேபோன்று குளவிசுட்டானைச் சேர்ந்த உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வேலைசெய்யும் சிவராசா என்பவரின் சகோதரன் தம்பிஐயா அண்ணை என்பவரும் இடம்பெயர்ந்த மக்களை வாகனத்தில் ஏற்றியிறக்க உதவிபுரிந்த பாரவூர்திச் சாரதி துரைச்சாமி என்பவரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார்கள்.

அதன்பின்னர் இரண்டாவது தாக்குதல் இடம்பெயர்ந்து வந்து நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது நடத்தப்பட்டது. இதன்போது பல பொதுமக்கள் உடல்சிதறிய நிலையில் இறந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அதன்பின்னர் இறந்தவர்கள் காயமடைந்தவர்களென அனைவருக்கும் நெடுங்கேணிப் பகுதியில் தனியார் வைத்தியசாலை நடத்தி வந்த வைத்தியர் ஜெயநாதன் மற்றும் வைத்தியர் கஜேந்திரா என்பவர்களுடன் அரச வைத்திய அதிகாரியும் இணைந்து சிகிச்சை செய்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவிற்கும் இறந்தவர்களை வீடுகளிற்கும் அனுப்பி வைத்தோம்.

இச்சம்பவம் நடந்து பல வருடங்கள் கடந்த நிலையிலும்,அதனை நினைக்கும்போது அனைத்துச் சம்பவங்களும் நேற்றைய தினம் நடந்ததுபோல் கண்முன்னே வருமளவிற்கு அந்த நிகழ்ச்சி எனது மனதில் மாறாவடுவாகவுள்ளது.”

கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (இல பெயர் தொழில் வயது)

01 கந்தையா சிறிதரன், கமம்ä, 22
02 கதிர்காமு கார்த்திகேசு, கமம், 44
03 தம்பையா நற்குணம், கமம், 31
04 மகாதேவன் மகேந்திரன், 31
05 முகமதுசரிபு றகீம், 26
06 முத்தையா துரைராசா, 64
07 அப்துல்காதர் முகமதுலிமாஸ், 24
08 பொன்னம்பலம் இராமநாதன், சாரதி,