தமிழரசுக்கட்சியினர் மீண்டும் எம்முடன் இணைந்து பயணிக்க வேண்டும். சுமந்திரனுக்கு இந்த அழைப்பை நான் விடுக்கின்றேன். தமிழர் விடுத்லைக் கூட்டணியில் மீண்டும் இணைவதன் மூலம் நன்மையான விடயங்களைப் பெறமுடியும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய அரசியலமைப்பு முறையிலான தீர்வையே நான் வலியுறுத்திவருகின்றேன். சிங்கள, இஸ்லாமிய மக்களும் அதனை வரவேற்றனர். அந்தத் தீர்வுத் திட்டத்துக்காக நாம் தொடர்ந்தும் முயற்சித்து வெற்றி பெறமுடியும். அதற்கான காலம் மீண்டும் உருவாகியுள்ளது.
அதனை உணர்ந்து செயற்பட வேண்டும். இன்று பதவிக்காக அலைகின்றனர். பதவிகளுக்காக கூட்டுச்சேருகின்றனர். நான் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. இன்றைய அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு அனைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து செயற்பட முன்வர வேண டும் – என்றார்.