ஆடைத் தொழிற்சாலைக்கு இந்தியர்கள் வந்தனரா? திட்டவட்டமாக மறுக்கிறார் இராணுவத் தளபதி

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலைக்கு இந்தியர்கள் வந்தனர் எனக் கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மை யும் இல்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஆயிரத்திற்கும்மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, எனினும், இதற்கான மூலத்தைக் கண்டறிய முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இதேவேளை, குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு அண்மையில் இந்தியாவில் இருந்து அதிகாரிகள் சிலர்வந்திருந்தனர் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து இராணுவத் தளபதியிடம் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, இந்தியர் வந்தனர் என்று எவ்விதத் தகவல்களும் இல்லை என்று தெரிவித்தார். அத்துடன், கொவிட் தொற்று ஒன்று ஏற்பட்டுள்ளதால் எங்கு, யாரிடமிருந்து இந்த தொற்று பரவியது என்பதைக் கண்டறிவது சவால்மிக்கது என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் சிலர் கடந்த 21ஆம் திகதி முதலே இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளுக்காக விடுமுறையில் சென்றுள்ளனர் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.