முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் பொங்கல் விழா இன்று (06) இடம்பெற்றுள்ளது. சிங்கள பேரினவாத அரசின் நில ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு மக்களின் தொடர் போராட்டங்களினால் தன்னைத் தக்கவைத்துள்ள பிள்ளையாரின் பொங்கல் விழாவில் பெருமளவான தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று அதிகாலை பொங்கல் விழாவுக்காக கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணியிலிருந்து எடுத்து வரப்பட்ட மடைப்பண்டம் அதிகாலை ஆலயத்தை வந்தடைந்ததுடன், பொங்கல் விழா ஆரம்பமாகியது.
இந்த பொங்கல் விழாவில்; வடமாகாணசபை முன்னாள முதல்வர் திரு விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், மாவை சேனாதிராஜா உட்பட பல அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
பௌத்த ஆலயங்களை நிறுவுவதன் மூலம் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்காக சிங்கள அரசின் உதவியுடன் சிங்கள பௌத்த துறவிகள் மேற்கொண்டுவரும் தொடர் நடவடிக்கைகளில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயமும் பாதிப்புக்களைச் சந்தித்திருந்தது.
ஆனால் தமிழ் மக்களின் தொடர் போராட்டங்களினால் தமிழ் மக்களின் நிலம் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. மக்கள் போரட்டம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவர்களின் பின்னால் அரசியல்வதிகளை அணிதிரள வைத்துள்ளது மக்கள் சக்தி.






