அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் செல்வம் அடைக்கலநாதன்

கொரோனா அச்சுறுத்தலினால் சிறு குற்றத்திற்கான கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இன்று(06) ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தத்தின் காரணமாக உடலில் செல் துகள்களை சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். அவர்களுடன் தீர்ப்பு வழங்கப்பட்ட அரசியல் கைதிகளும் உள்ளனர்.

தற்போது இவர்கள் மருத்துவ வசதிகள் இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

அதேவேளை குறித்த அரசியல் கைதிகளையும் முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம் விடுதலை செய்ய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்“ என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.