அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் பொறுப்பற்ற பதில் வழங்கிய அமைச்சர் டக்ளஸ்

“கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் எமது கையை பலப்படுத்தினால் அரசியல் கைதிகளின் விடுதலை உடனடியாக இடம்பெறும் என்றேன்”.அது விருப்பமில்லாமலே மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பற்று பதில் வழங்கியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தலைமையில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது

இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்,
“அரசியல் கைதிகளின் விடுதலை தெடர்பில் பலர் உங்களிடம் நேரடியாகவே வருகைதந்து கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது“ என  ஊடகவியலாளர் ஒருவர்  கேள்வி  கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த  அமைச்சர்,   “அரசாங்கத்துக்கு மாத்திரமல்ல பலருக்கு பலவிதமான அபிப்பிராயங்கள் இருக்கிறது. நடந்து முடிந்த  ஜனாதிபதி தேர்தலிலும் நடந்து முடிந்த  நாடாளுமன்ற தேர்தலிலும் நான் மக்களிடம் கேட்டிருந்தேன். அரசியல் கைதிகள் தொடர்பாக எனக்கு கூடின வாக்குகளையும் கூடின ஆசனங்களையும் தருமாறு. அப்படி தந்திருந்தால் இந்த பிரச்சனையை உடனடியாக தீர்ப்பேன் என்றும் சொல்லியிருந்தேன். ஆனால் மக்கள் அந்த பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லையோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது” என்றார்.