அம்பாறையில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி

அம்பாறை – சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி அகழ்வுப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று (17) காலை 9 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை குறித்த அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த காலத்தில் குறித்த காணியில் விடுதலைப் புலிகள் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து மறைத்து வைத்துள்ளதாக அம்பாறை விசேட காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கமைய இந்த அகழ்வு பணி நடைபெற்றது.

இதன்போது சம்மாந்துறை நீதவான், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர், கல்முனை பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் அகழ்வுப் பணி இடம்பெற்றது.

எனினும் குறித்த பகுதியில் எந்தவொரு தடயப் பொருளும் மீட்கப்படாமையால் அகழ்வுப் பணிகளை நிறுத்திவிட்டு அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.