வெள்ளை வான் கலாசாரத்தை மீண்டும் முன்னெடுக்கத் திட்டமா? விக்கிரமபாகு

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின்போது வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றதை நான் நன்கறிவேன் என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“மஹிந்த ராஜபக்rவின் ஆட்சியின்போது வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றமையை நான் நன்கறிவேன். அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் என்னைத் தொலை பேசியின் ஊடாகத் தொடர்புகொண்டு பேசியுமிருந்தார்.

நாம் அத்தகைய கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்பட்டு வந்தோம். எனவே மஹிந்தவின் ஆட்சியில் அத்தகைய சம்பவங்கள் எவையும் நடைபெறவில்லை என்று எவராலும் மறுத்துவிட முடியாது.

வெள்ளை வான் விவகாரம் தொடர்பில் அம்பலப்படுத்திய ராஜித சேனாரத்னவை ஆபத்திற்குள்ளாக்கி, தொடர்ந்தும் வெள்ளை வான் கலாசாரத்தை நாட்டின் முன்னெடுத்துச் செல்லலாம் என்றும், ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் உடைத்தெறிந்துவிட்டு முன்நோக்கிப் பயணிக்க முடியும் என்று ஒருபோதும் கருதவேண்டாம்” என்றார்.