விவசாயிகளை ஒடுக்கும் பாஜக – வைரலாகும் புகைப்படம்

இந்திய தலைநகர் டெல்லி மற்றும் அதன் அண்டை மாநில எல்லைகளிலும், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் இந்தப்  போராட்டத்தை ஒடுக்க பல நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் காவல்துறை மூலம் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை ஒடுக்கும் காட்சிகள் தொடர்பான பல படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

மேலும் இந்த படம் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக பக்கங்களில் வைரலாகி பல்லாயிரக்கணக்கான பதிவுகளையும் லைக்குகளையும் பெற்று வருகிறது. பலரும் ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற முழக்க வரிகளை இந்த படத்துடன் குறிப்பிட்டு, இதுவா நமது விவசாயிகளின் நிலை என்று கேட்டிருந்தனர்.

1965ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டபோது, இந்த முழக்க வரியை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் தேசத்தை கட்டமைப்பதில் இராணுவ வீரர்களைப் போல விவசாயிகள் முக்கியமானவர்கள் என்பதை அவர் உணர்த்த விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஒரு படம், பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில்,இந்த ஒரு படத்தை வைத்து, இந்திய விவசாயிகளின் நிலை குறித்த பிரதமர் மற்றும் அவர் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியையும் விமர்சித்து வருகிறார்கள் எதிர்க்கட்சிகள்.

இந்தியாவில் விவசாயிகளை ஆளும் பாரதிய ஜனதா கட்சி நடத்தும் விதத்தை விவரிக்க இந்த ஒரு படம் போதும் என்று எதிர்கட்சிகள் கூறினாலும், அந்த முதியவரை துணை இராணுவப்படை வீரர் தாக்கவேயில்லை என்று ஆளும் கட்சியினர் கூறி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

முன்னதாக இந்த விவகாரத்தில் விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டே சீர்திருத்த நோக்கில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார். ஆனால், அதை ஏற்க மறுக்கும் விவசாயிகள் அதை முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.