விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட 4பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மகிந்த சமயவர்த்தன, பிரியந்த பெர்னான்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வழக்கு வந்த போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் முன்னர் அறிவிக்கப்பட்ட அறிவிப்பில், வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்து வெளியிட்ட வர்த்தமானியை இரத்துச் செய்து, மீண்டும் அவரை அமைச்சர் பதவியில் நியமிக்குமாறு அறிவித்தல் விடப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமைக்காக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் உட்பட 4 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு எதிர்வரும் மே 18ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.