வளைகுடாவில் இன்னுமொரு எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது

வளைகுடா பகுதியில் ஈரான் மற்றொரு எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது அரபு நாடு ஒன்றிற்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நாட்டிற்குரியது என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.

இந்தக் கப்பலில் 7இலட்சம் லீற்றர் எண்ணெயும், 7 மாலுமிகளும் இருந்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமது மீன்பிடிக் கப்பலில் மோதியதாகக் கூறி, அதே பகுதியில் பிரித்தானிய எண்ணெய்க் கப்பலான “ஸ்டெனா இம்பெரோ“ என்ற கப்பலை கடந்த மாதம் 19ஆம் திகதி ஈரான் சிறைப்பிடித்திருந்தது. அதையடுத்து இன்றைய தினம் (04.08) மற்றுமொரு கப்பலை சிறைப்பிடித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீது அமெரிக்க புதிய பொருளாதார தடையை விதித்ததை அடுத்து கடந்த மே, ஜுன் மாதங்களில் ஈரானின் தெற்குக் கடற்பகுதியில் பல கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.

தடை செய்யப்பட்ட சிரிய நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றதாக “கிரேஸ் 1“ என்ற ஈரான் எண்ணெய்க் கப்பலை ஹோர்முஸ் ஜலசந்தியில் பிரித்தானியா கடந்த மாதம் 4ஆம் திகதி சிறைப்பிடித்தது.