மாவீரர்களை நினைவேந்தினால் தனிமைப்படுத்தல் சட்டம் பாயும் – இராணுவத் தளபதி எச்சரிக்கை

“உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அதை மீறி நடத்தினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.

தேசிய கொரோனா கட்டுப்பாட்டு செயலணிக்கும் தலைவராக செயல்படும் அவர், நேற்றைய தினம் ஊடகங்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், “கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையில் உள்ளது. மக்கள் ஒன்று கூடுவது தொடர்பில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்படி நடைமுறைகளை மீறி ஏனையோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பொது வெளியில் எவராவது செயல்பட்டால் அவர்களுக்கு எதிராகப் பொலிஸாரால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

போரில் மரணித்த சாதாரண மக்களை நினைவுகூருவதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அதனை வீட்டில் இருந்து செய்யலாம். ஆனால், பயங்கரவாத அமைப்பில் இருந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்தவர்களை அதுவும் பொது வெளியில் குழுக்களாக இணைந்து நினைவு கூருவது ஏற்புடைய நடவடிக்கையாக இருக்காது. உலகில் எந்தவொரு நாடும் இதற்கு அனுமதி வழங்காது” என்றும் அவர் கூறினார்.