மத்திய அரசின் பெயர்ப்பலகையினை அகற்றியமை; தவிசாளரிடம் இரண்டாவது நாளும் வாக்குமூலம்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் அனுமதியின்றி, சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு திரைநீக்கம் செய்துவைக்கப்பட்ட திட்ட அறிவிப்புப் பெயர்ப்பலகையினை அகற்றியமை தொடர்பில் சனிக்கிழமை இரண்டாவது தடவையும் தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் அச்சுவேலி பொலிசாரினால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், குறித்த அறிவித்தல் பலகையினை மேலதிக விசாரணைக்காக எழுதுமாறு கோரி பொலிஸார் பெற்றுச் சென்றுள்ளனர்.

இது பற்றி அவர் தெரிவிக்கையில், காலை நீர்வேலியில் வெள்ள தணிப்புச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தவிசாளரைச் சந்தித்து மேலதிக நடவடிக்கைகளுக்காக பிரதேச சபையில் பாதுகாப்பில் உள்ள அறிவித்தல் பலகையினைத் தருமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். நான் கடிதம் ஒன்றைக்  கோரி அவணப்படுத்திய பின் மேலதிக நடவடிக்கைக்காக என்ற காரணத்தினால் அப் பொயர்ப்பலகையினை வழங்கினேன். அவ் அறிவித்தல் பலகையினை வழங்கியபோது மீளவும் குறித்த பொயர்ப்பலகை அகற்றப்பட்டமைக்கான காரணம் உள்ளடங்கலாக வாக்குமூலம் ஒன்றை மேலதிகமாக பொலிஸார் பெற்றனர்.

நான் இன்றைய வாக்குமூலத்தில், பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி ஒன்றை எமது சம்மதமோ அனுமதியோ பெறாது புனரமைப்பதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை அவ் அறிவித்தல் பெயர்ப்பலகையிலும் எமது பதிவிற்கு உட்பட்ட வீதியை புனரமைப்பதற்காக ஊரெழு அம்மன் கோவில் வீதியை புனரமைத்தல் என்ற தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் பிரதேச சபை ஒன்றின் பகிரப்பட்ட அதிகாரத்தினை நிலைநாட்டுவதற்காக அகற்றினேன் என்பதை சொல்லியிருக்கின்றேன் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தொரிவித்தார்.