நினைவுகளை மறுத்து நீதி இல்லை – முள்ளிவாய்க்கால் நினைவுரையில் முன்னாள் ஐ. நா. ஆலோசகர் அடமா

நினைவுகளை மறுத்துவிட்டு நீதியைப் பரிசோதிக்க முடியாது. கடந்த காலத்தை எதிர்த்தோ மறுத்தோ நிகழ்காலத்தில் நிலையான அமைதியையும் முன்னேற்றத்தையும் எட்டிவிட முடியாது. முள்ளிவாய்க்கால் ஆவணப்படுத்தல்களும் அதுசார்ந்த நினைவுமயப்படுத்தல்களும் உலகில் இது போன்ற மாபெரும் கொடுமைகளுக்கு எதிரான மனித உரிமை முன்னெடுப்புகளின் ஒரு முக்கியமான பகுதியாக மாறியுள்ளன.

இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ. நாவின் முன்னாள் விசேட ஆலோசகர் (Special Adviser on the Prevention of Genocide) அடமா டியங்க் (Adama Dieng) மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட இணைய வழி நினைவுகூரல் நிகழ்வில் நேற்று அடமா டியங்க் ‘முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை’யை நிகழ்த்தினார்.

அவரது அந்த உரை இலங்கையில் குற்றங்களுக்கான பெறுப்புக்கூறல் மற்றும் நீதி பரிகார நடவடிக்கைகளின் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களை மதிப்பீடு செய்யும் வகையில் அமைந்தது.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவு கூர்ந்தும் அதில் உயிர்தப்பியோரின் வலிகளுக்கு மரியாதை செலுத்தியும் நினைவுரையை வழங்குவதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கை விடயத்தில் பரிகார நீதி நடவடிக்கைகள் சர்வதேச குற்றங்களுக்கு உட்பட்டதாகவோ அன்றி தேசங்களுக்கு உட்பட்டவையாகவோ எதுவாக இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்திச் செய்யப்படுகின்ற போதுதான் உண்மையான பொறுப்புக் கூறலாக அமைய முடியும்  என்று வலியுறுத்தினார்.

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு மானிடப் பேரவலத்தின் நினைவுகளாக நம்மிடையே உள்ளது. நினைவுகளை மறுத்துவிட்டு ஒருபோதும் உண்மையைப் பரிசோதித்துவிட முடியாது. கடந்த காலத்து நினைவுகளை மீட்டுவது நிகழ்காலத்தின் மீது நம்பிக்கையைக் கொண்டுவர உதவும் – என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாத – அதில் முழுமையான ஈடுபாடு காட்டாத அசிரத்தை உள்ள- அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை உருவாக்குவதை இலங்கை விடயத்தில் நாங்கள் கண்டுள்ளோம். அவ்வாறு ஓர் அரசு செயற்படுமாயின் தன்னுடைய பொறுப்புக் கூறலில் இருந்து விலகிச் செல்லுமாக இருந்தால் அதற்கான பொறுப்பு சர்வதேச அமைப்புகள் மீதே சுமத்தப்படுகிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். ஆனால் எந்த மண்ணில் கொடுமைகள் நிகழ்ந்தனவோ அந்த நாட்டின் அரசு என்ற வகையில் இலங்கையைத் தள்ளிவைத்து விட்டுப் பொறுப்புக் கூறல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றுவிடவும் முடியாது -என்று அடமா குறிப்பிட்டார்.

‘கோவிட்’ வைரஸ் நிலைமைகளுக்குப் பின்னர் அதை ஒரு சாட்டாக அல்லது காரணமாகப் பயன்படுத்தி பொறுப்புக் கூறல் மற்றும் நீதி வழங்கும் செயற்பாடுகளில் இருந்து சிறிலங்கா அரசு மேலும் பின்வாங்குகின்ற சூழல் காணப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டியும் உள்ளது என்ற சாரப்படவும் அவர் தனது கருத்தை வெளியிட்டார்.

தற்போதைய ஆட்சியில் இலங்கை ஒரு பாரதூரமான நிலைமைக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதை விளக்கி அதன் நடவடிக்கைகளை “முரண்பாடுகளுக்கான விதைகளைத் தூவுதல்” என்று தலைப்பிட்டு கடிதம் ஒன்றை முன்னாள் ஐ. நா. செயலாளர்களுடன் இணைந்து வெளியிட்டதை அடமா தனது உரையில் நினைவு கூர்ந்தார். இலங்கையில் வரவிருக்கும் பேராபத்தை அங்குள்ள நிலைமைகள் முன்கூட்டியே உணர்த்துகின்றன. ஜனநாயகத்துக்கான இடைவெளி அங்கு சுருங்கி வருகின்றது என்ற எச்சரிக்கையை அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்ததையும் அவர் குறிப்பிட்டார்.

செனகல் நாட்டைச் சேர்ந்தவரான சட்ட நிபுணர் அடமா டியங்க் 2012 ஆம் ஆண்டு அப்போதைய ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீன் மூனினால் இனப்படுகொலை களைத் தடுப்பதற்கான விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். செனகலில் நீதி மற்றும் சட்டத் துறைகளில் நீண்ட காலம் பதவிகளை வகித்து வந்த அவர் 2001 ஆம் ஆண்டு முதல் றுவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் பதிவாளராக இருக்கிறார். அத்துடன் சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழுவிலும் நீண்டகாலம் செயற்பட்டவர். 1995 முதல் 2000 வரை ஹெய்ட்டி நாட்டுக்கான ஜக்கிய நாடுகள் சபையின் சுயாதீன நிபுணராகவும் இருந்து வந்தவர்.