நவுருத்தீவில் வாகனத்தால் மோதி தாக்கப்பட்ட தமிழ் அகதிக்கு அவுஸ்திரேலியாவில் சிகிச்சை

நவுருத்தீவில் தமிழ் அகதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது வீதியால் சென்ற வாகனம் ஒன்று வேண்டுமென்றே மோதியதையடுத்து கடும் காயங்களுக்கு உள்ளாகியிருந்தநிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் அவுஸ்திரேலியா அழைத்துவரப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய் இரவு 36 வயதான குறித்த அகதி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு வாகனத்தில் வந்த நவுறுவாசிகள் சிலர் அவர் மீது வாகனத்தை மோதி கீழே விழச்செய்துவிட்டு மோட்டார் சைக்கிளைக் களவாடிக்கொண்டு சென்றதுடன் கீழே விழுந்துகிடந்தவர்மீது வாகனத்தை ஏற்றிச்சென்றுள்ளனர்.

இதையடுத்து கை, கால், முகம், முதுகு என பல இடங்களில் என்பு முறிவுக்குள்ளாகி ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்று சனிக்கிழமை அவுஸ்திரேலியா அழைத்துவரப்பட்டதாக Refugee Action Coalition தெரிவித்துள்ளதாக எஸ்பிஎஸ் தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.