கொவிட்-19 தொற்றின் மூலம் மற்றொரு இன அழிப்பை அரசு திட்டமிடுகின்றதா? கஜேந்திரகுமார்

“தாயகப் பிரதேசங்களில் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான வளங்களை தேவைக்கேற்ப வழங்காது தொற்றாளர்கள் அனைத்து இடங்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாது நடமாடும் அபாய நிலையை அரசு வேண்டுமென்றே தமிழர் தாயகப் பிரதேசங்களில் தோற்றுவித்துள்ளதா? முள்ளிவாய்க்கால் இன அழிப்பையொத்த இன்னொரு இன அழிப்பு யுத்தத்தை அரசு கொவிட்-19 பெருந்தொற்றின் மூலம் தமிழர் தாயகத்தில்; கட்டவிழ்த்துவிட்டுள்ளதா?”

இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கின்றார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“தமிழர் தேசத்தை சிதைக்கும் நோக்கத்துடன் தமிழினத்துக்கு எதிராக சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்த இனவழிப்பு யுத்தமானது 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் அதன் உச்சக்கட்டத்தை அடைந்து தமிழ் இனப் படுகொலையாக சர்வதேசத்தினதும் மனச்சாட்சிக் கதவுகளை உலுக்கியிருந்தது. இவ்வாறு சர்வதேச சட்ட ஏற்பாடுகளுக்கு மாறாகவும் யுத்தநெறிமுறைகளுக்கு முரணாகவும் மனிதத்துவத்துக்கு எதிராகவும் சிறிலங்கா அரசினால் முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கபட்டமையை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் வாரம் அதன் 12 ஆம் ஆண்டு நினைவு வாரமாக நினைவுகூரப்படடு வருகின்றது.

தமிழின உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதமாக சித்தரித்துக்கொண்டு சிறிலங்கா அரசினால் காலம் காலமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழின அழிப்பு நடவடிக்கைகளையும், 2009 முள்ளிவாய்க்காலில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், இளைஞர்கள், யுவதிகள் என ஆயிரக்கணக்கானோர்; சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும், பல ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் சுமார் ஒரு லட்சத்து நாற்பத்தாறாயிரத்து எழுநூறுக்கும் அதிகமான தமிழ் மக்கள் இனவழிப்பு செய்யப்பட்டதை தமிழினம் நினைவுகூரும் நாட்கள் இவையாகும்.

இவ்வாறு தமிழர்களின் உரிமைப் போராட்டம் 2009இல் தமிழின அழிப்பு யுத்தம் மூலமாக மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு நீதிக்கான போராட்டத்தினை அடக்கியொடுக்கும் வகையில் சிறிலங்கா அரசு மேற்கொண்டுவரும் ஒடுக்குமுறைகளுக்கு அடிபணியாது அவற்றுக்கு எதிராகவும், கட்டமைப்புசார் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நாம் மக்களை அணிதிரட்டி ஜனநாயக வழிமுறைகளில் போராடிவருவதுடன் சிறிலங்கா அரசினது அனைத்து அச்சுறுத்தல்களையும் தாண்டி முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி ஒவ்வொரு வருடமும்;; முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தலை பொது அமைப்புக்களோடும், மக்களோடும் இணைந்து கூட்டாக முன்னெடுத்தும் வந்துள்ளோம்.

தற்போது முழுஉலகையும் உலுக்கிவரும் கொவிட்-19 பேரழிவுப் பெருந்தொற்று அலை, இராணுவ மயப்படுத்தப்பட்ட சிறிலங்கா அரசினது நிர்வாகக் கட்டமைப்பின் இயலாமையினால், முழு இலங்கை மக்களையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதில் அரசின் தோல்வியினை சுகாதாரத் துறையினர் குற்றஞ் சாட்டிவரும் அதேவேளை நாட்டில் சடுதியாக கொவிட் மரணங்களும் அதிகரித்துச் செல்வதனால் கொவிட்-19 அலை தொடர்பாக சுகாதாரத்துறையினர் மிகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தும்வருகின்றனர். ஆனால் அரசாங்கமோ கொவிட்-19 அலை காரணமாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைகளை மூடிமறைத்து மக்களை தவறாக வழிநடாத்தி வருவதுடன் அரசின் தோல்வியை மூடி மறைக்க, சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைத் விதைத்து தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டி இராணுவ அனுசரணையுடன் இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

மேலும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் இருப்புக்கு பெரும் சவாலாக கொவிட்-19 அலை உருவெடுத்துள்ள நிலையில் சிறிலங்கா அரசினால் முடக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசங்களில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளை பல நாட்கள் கடந்தும் வழங்க முடியாது சுகாதாரத் துறையினர் திண்டாடுகின்றனர். இப்பிரதேசங்களில் பொது மக்களுக்கான தடுப்பூசிகளை அரசு இன்னமும் வழங்கியிருக்கவுமில்லை. இவ்வாறு தொற்று அதிகரித்துள்ள தாயகப் பிரதேசங்களில் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான வளங்களை தேவைக்கேற்ப வழங்காது தொற்றாளர்கள் அனைத்து இடங்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாது நடமாடும் அபாய நிலையை அரசு வேண்டுமென்றே தமிழர் தாயகப்பிரதேசங்களில் தோற்றுவித்துள்ளதா, முள்ளிவாய்க்கால் இன அழிப்பையொத்த இன்னொரு இன அழிப்பு யுத்தத்தை சிறீலங்கா அரசு கொவிட்-19 பெருந்தொற்றின் மூலம் தமிழர் தாயகத்தில்; கட்டவிழ்த்துவிட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.

இன்றைய நெருக்கடியான சூழலிலும் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுகூர்வதன் மூலம் 21ம் நூற்றாண்டின் மனிதப் பேரவலத்தை உலகறியச்செய்வதும் அடுத்த தலைமுறைகளுக்கு அதனைக் கடத்துவதும் எமது தலையாய கடமையும் பொறுப்புமாகும். மேலும் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துள்ள அரசு, கொவிட்-19 தொற்றிலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்க விசேட அக்கறை செலுத்;தும் என எதிர்பார்க்க முடியாது. எனவே கோவிட் 19 பேரழிவுத் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைமையாய் எமது மக்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் எமக்குண்டு.

இந்நிலையில் முள்ளிவாய்க்காலில்; கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக இனவழிப்புக்கான நீதியை வேண்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில், இனவழிப்பின் சாட்சியங்களாய் எமது ஆத்மாவை தினமும் உலுப்பிக்கொண்டிருக்கும் கொடூரமான இனவழிப்புச் சம்பவங்களை நினைந்து கறுப்புக்கொடிகளை பறக்கவிடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். இறுதிநாளான 2021ஃ05ஃ18 ஆம் திகதி பொது இடங்களிலும், இல்லங்களிலும் ஒன்றுசேர்வதைத் ஃ ஒன்றுகூடுவதைத் தவிர்த்து கோவிட் 19 பரவல் தடுப்பு விதிமுறைகளுக்கு அமைவாக முகக்கவசங்கள் அணிந்;து சமூக இடைவெளியைப் பேணியவாறு ஒவ்வொருவரும் தனித்தனியாக விளக்கேற்றி;யும் அஞ்சலிக்குமாறு கோருகின்றோம். அத்துடன் முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் அனுபவித்த பட்டினிச் சாவை நினைவு கொள்ளும் வகையில் கஞ்சியினை பரிமாறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவுகூரும் இவ் வரலாற்றுக் கடமைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு எமது மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.

ஓரிடத்தில் ஒன்று கூடி நினைவேந்துவதே எமது கூட்டுரிமையாகும். எனினும் இம்முறை கொவிட் 19 ஆபத்து நிலையில் ஓரிடத்தில் ஒன்று கூடுவதிலுள்ள ஆபத்தினை கருத்திற் கொண்டு தனித்தனியாக நினைவேந்தலை மேற்கொண்டாலும், இந்நினைவு கூரல் நிகழ்வுகள் மூலமான கூட்டுப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் முகமாக அவற்றை சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளுமாறும் அன்புரிமையுடன் வேண்டுகின்றோம்”