வவுனியா நகர் அதிகளவு கொரோனா பரவல் காணமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கமைய வவுனியா நகரப்பகுதி மற்றும் குருமண்காடு பகுதிகளில் உள்ள வங்கிகள், பலசரக்குக் கடைகள், உணவகங்கள், மருந்தகங்கள், தனியார் நிறுவனங்கள், திணைக்களங்கள், பல்தேசிய அங்காடிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

முதலாம் குறுக்குத் தெரு, இரண்டாம் குறுக்குத் தெரு, கந்தசாமி கோயில் வீதி, பஜார் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி ஆகியன நகரில் இருந்து உட்புகாதவாறும் வெளியில் இருந்து நகருக்குள் உட்புகாதவாறும் பூட்டப்பட்டுள்ளன.
தீவிர தேவையெனின் குறித்த பகுதியில் உள்ள காவல் துறையினரின் அனுமதியைப் பெற்று உட்செல்ல முடியும். எரிபொருள் நிலையங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.

அதேபோல புறநகர் பகுதிகளில் அதாவது மன்னார் வீதி காமினி மகாவித்தியாலயப் பகுதி, பூந்தோட்டம் சந்தி, கோவில்குளம் சந்தி, பட்டானிச்சூர், பண்டாரிக்குளம், குட் செட் வீதி, தேக்கவத்தை போன்ற பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தைப்பொங்களுக்கான பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.