கூட்டமைப்புடன் இந்தியா இணைந்து பணியாற்றும்;கூட்டமைப்பு அனைத்து விடயங்களிலும் ஆதரவளிக்கும்

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று முன்தினம் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை தொலைபேசியில் தொடர்புகொண்ட உயர்ஸ்தானிகர், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளும் பல காலங்களாக இணைந்து செயற்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தொடர்ந்து இருக்குமென இரா. சம்பந்தனும் உயர்ஸ்தானிகருக்கு உறுதியளித்தார்.

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது சான்றுகளை நேற்று முன்தினம் ஜனாதிபதியிடம் கையளித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னரே இரா. சம்பந்தனுடன் தொடர்புகொண்டு பேசியுள்ளார்