ஹமாசினால் கடத்திச் செல்லப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க, காத்திரமான நடவடிக்கைகளை இஸ்ரேல் அரசு முன்னெடுக்க வேண்டும் என்று அந்த அரசைக் கோருவதற்காக, சென்னும் மேலும் நூற்றுக்கணக்கான பணயக்கைதிகளின் உறவுகளும் கடந்த சனிக்கிழமை கிர்யாவுக்கு வெளியே ஒன்றுகூடியிருந்தார்கள்.
ஹமாசின் தாக்குதலுக்கு அடுத்து வந்த சில நாட்களில், இஸ்ரேலிய அரசை விமர்சிக்க பணயக்கைதிகளின் உறவுகள் விரும்பவில்லை. அந்த நிலை தற்போது மாற்றமடைந்திருக்கிறது என்பது கவனிக்கப்படவேண்டும். இஸ்ரேல் அரசு, காஸா மீது தற்போது முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கை தொடர்பாக தங்களுடன் எந்தவிதமான உரையாடல்களையும் மேற்கொள்ளாததையிட்டு தாம் மிகுந்த கோபமடைந்திருப்பதாக மிகக் கடுமையான தொனியில் எழுதப்பட்ட அவர்களது அறிக்கை தெரிவித்தது. பணயக்கைதிகளின் உறவுகள் பிரதம மந்திரி நெத்தன்யாகுவுடன் மேற்கொண்ட சந்திப்பில் இரு தரப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டிருந்தது. ஹமாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது போல, ‘எல்லாருக்காகவும் எல்லாரும் விடுவிக்கப்பட வேண்டும்’ என்ற கொள்கை பின்பற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை பணயக்கைதிகளின் உறவுகள் கோரியிருந்தனர். இருநூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமாயின் இஸ்ரேல் சிறைகளில் சிறைவைக்கப்பட்டிருக்கின்ற தமது 6630 உறுப்பினர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே அந்த நிபந்தனை ஆகும். எல்லா பாலஸ்தீனக் கைதிகளையும் விடுவிப்பது என்பது உண்மையில் பிரச்சினைக்குரியதாக இருக்கும். காரணம் என்னவென்றால், பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அந்தக் கைதிகள் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன. “இஸ்ரேல் பொதுமக்களைத் திசைதிருப்புவதற்கு ஹமாஸ் கையாளும் உளவியல் பயங்கரவாதம்” என்று ஹமாசின் நிபந்தனையை இஸ்ரேல் பாதுகாப்புப் படை சித்தரித்தது. 2011 ஒக்ரோபரில் ஹமாசினால் ஏற்கனவே கடத்தப்பட்டிருந்த இஸ்ரேலிய சிப்பாயான கிலாட் ஷாலிற் (Gilad Shalit) என்பவருக்குப் பதிலாக 1000 பாலஸ்தீனச் சிறைக்கைதிகளை இஸ்ரேல் விடுவித்திருந்தது. இஸ்ரேலிய நீதிமன்றுகளினால் தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகளும் அந்த எண்ணிக்கையில் அடங்கியிருந்தனர். இவர்களில் ஒரு சிலர் விடுவிக்கப்பட்ட பின்னர், இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தனர். ஒக்ரோபர் 7ம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதலின் சூத்திரதாரிகளில் ஒருவர் எனக்கருதப்படும் யாயா ஷின்வார் (Yahya Sinwar) விடுவிக்கப்பட்ட அந்தக் கைதிகள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. “பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு எதை எதையெல்லாம் செய்ய முடியுமோ அவை அத்தனையையும் இஸ்ரேல் அரசு செய்ய வேண்டும்” என்று சென் கூறினார். “விடுதலையை முன்னெடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றிய அறிவு என்னிடம் இல்லை. கடைசியாக முடிவாக எது நடக்கிறது என்பது தான் முக்கியமானது. எனது பிள்ளை இன்னும் உயிரோடு இருக்கிறானா அல்லது இறந்துவிட்டானா என்பது கூட எனக்கு இன்னும் தெரியாது. அது தான் உண்மை” என்று தொடர்ந்து கூறினார். பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படக்கூடாது என்று பணயக்கைதிகளின் உறவினர் தெரிவித்தனர். இஸ்ரேல் மக்கள் பணயக்கைதிகளின் உறவுகளுக்கு ஆதரவாக இருக்கின்றனர். பணயக்கைதிகளின் விவகாரத்தை அரசு கையாளும் முறை தொடர்பாக மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான கோப உணர்வு படிப்படியாக அதிகரித்துவருகிறது. இதற்கு முன்னர் நெத்தன்யாகுவின் அரசை ஆதரித்தவர்களும் அந்தக் குழுவில் அடங்குகின்றனர். “நான் வேறு ஒருவருக்குத் தான் வாக்களித்தேன். உண்மையில் நான் வாக்களித்த வேட்பாளர் இஸ்ரேல் நாட்டுக்கு நல்லதைச் செய்திருக்கிறார். மிகத் தைரியமான இராணுவ வீரராக அவர் இருந்தார். ஆனால் தொடர்ந்து 15 வருடங்களாக பிரதம மந்திரியாக அவர் இருந்து வருகிறார். எனவே அவரைத் தான் நாங்கள் குற்றஞ்சாட்ட வேண்டும். பதவியை விட்டு அவர் இனி வெளியேற வேண்டும். இந்த விடயம் எல்லோருக்கும் தெரியும். ஏன் நெத்தன்யாகுவுக்குக் கூட நன்றாகவே தெரியும்” என்று சென் தெரிவித்தார். ‘இஸ்ரேல் மீடியா’ என்ற ஊடக அமைப்பின் வேண்டுகோளில் இஸ்ரேல் பல்கலைக்கழகம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி நெத்தன்யாகு அரசுக்கு இஸ்ரேல் மக்களிடம் இருந்த ஆதரவு இப்போது முற்றாகச் சரிந்துவிட்டது. நெத்தன்யாகு வெளியேற வேண்டும் என்பதையே இஸ்ரேலிய மக்களில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். அரசுக்கான ஆதரவு கணிசமான அளவு சரிந்திருக்கின்ற போதிலும், பன்னாட்டு சமூகத்திடமிருந்து கடுமையான கண்டனங்கள் எழுகின்ற போதிலும், ஹமாசின் மீது போரை முன்னெடுக்க அரசு மேற்கொண்ட முடிவுக்கு யூத இனத்தைச் சேர்ந்த இஸ்ரேலியர்களின் ஆதரவு உறுதியாக இருக்கிறது. இஸ்ரேலில் வாழுகின்ற அரபு இனத்தைச் சேர்ந்த குடிமக்களும் பாலஸ்தீன மக்களும் இஸ்ரேல் யூத இனத்தவரில் ஒரு சிறு பகுதியினரும் போரை ஏற்றுக்கொள்ளாத போதிலும், கருத்துச் சுதந்திரம் தடைசெய்யப்பட்டிருப்பதனால் அரசுக்கு எதிரான எந்தக் கருத்தும் தற்போதைய சூழலில் ஆபத்தானதாகவே இருக்கிறது.
காஸாவுக்கும் அங்குள்ள அப்பாவிப்பொதுமக்களுக்கும் ஆதரவை வெளிப்படுத்தியதற்காக பாலஸ்தீனக் குடிமக்கள் பலரும் இஸ்ரேல் குடிமக்கள் பலரும் இஸ்ரேல் அரசினால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஒக்ரோபர் 25ம் திகதி இஸ்ரேல் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் தூண்டத்தக்க கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவுசெய்ததற்காக 110 பேரை தாம் கைதுசெய்திருப்பதாகத் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 17 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பகிரங்கமான முறையில் காஸாவில் வாழும் பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதும், இஸ்ரேல் அரசின் இராணுவ நடவடிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதும் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. போருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. காஸாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவுசெய்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். “எனக்கு இப்போது 22 வயது. கடந்த நான்கு வாரங்களில் நான்கு அடக்கச்சடங்குகளில் நான் பங்குபற்றியிருக்கிறேன். ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் எனது நண்பர்கள் இருவர் கடந்த வருடம் கொல்லப்பட்ட போது, அவர்களது அடக்கச் சடங்குகளிலும் நான் பங்குபற்றியிருக்கிறேன்” என்று சிஎன்என் (CNN) ஊடகம் ஜெரூசலம் நகர மையத்தில் அமைந்திருக்கும் சீயோன் சதுக்கத்தில் மேற்கொண்ட நேர்காணலில் ஜொனாத்தன் றபாபோட் (Yonatan Rapaport) குறிப்பிட்டிருந்தார். தான் ஒரு இசைக்கலைஞன் என்றும், இஸ்ரேல் கடற்படையில் தனது கட்டாய இராணுவச் சேவையின் போது காஸாப் பகுதியில் தான் ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவித்த றபாபோட், காஸாவில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பாக பன்னாட்டுச் சமூகத்தின் கருத்துகள் பற்றிய தனது விரக்தியுணர்வை வெளிப்படுத்தினார். “காஸாவை ஏன் பழிவாங்குகிறீர்கள் என்று மக்கள் கேட்கும் போது, எமது பொதுமக்களையும் இராணுவ வீரர்களையும் பாதுகாக்கும் உரிமை எமக்கு இல்லையா? ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலுக்கு ஈடான எதிர்த்தாக்குதல் உண்மையில் எப்படியிருக்கும்? பொதுமக்களைக் கொல்வதை இயன்றவரை நாங்கள் தவிர்த்து வருகிறோம். என்று அவர் தெரிவித்தார். “இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடைபெற்றுவரும் போரை கறுப்பு வெள்ளையாகப் பார்க்க முடியாது. ஆனால் ஹமாசுக்கு எதிரான போர் அப்படிப்பட்டது தான். இஸ்ரேலிய அரசுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்களில் நியாயத்தன்மை இருக்கிறது. ஆனால் இஸ்ரேல் அரசை விமர்சிப்பதிலும் யூத மக்களை வெறுப்பதிலும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். எல்லோரும் அப்படி அவதானமாகக் கதைப்பதாகத் தெரியவில்லை. மேற்குக்கரையை அல்லது காஸாவை ஆக்கிரமிப்பது தொடர்பாக நீங்கள் உரையாடலாம். ஆனால் அதற்காக 1400 அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வது சரியென்று நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்.
போருக்கு முன்னர் இஸ்ரேலின் நீதித்துறையைச் சீர்திருத்துவது தொடர்பான அவரது திட்டங்களை எதிர்த்து நான் விமர்சனங்களை முன்வைத்திருந்தேன். அவரது அந்தச் செயற்பாடு எமது நாட்டைப் பிளவுபடுத்தியிருக்கிறது. “இந்தப் போர் முடிவுக்கு வந்த பின் இந்த அரசு முழுமையாகக் கலைக்கப்படவேண்டும். ஆனால்.. இப்போதோ நாங்கள் போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு தனி மனிதனாக நெத்தன்யாகுவில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் ஒரு தலைவன் என்ற அடிப்படையில் அவரில் நான் நம்பிக்கை வைத்துத் தான் ஆக வேண்டும்” என்று றபாப்போட் தொடர்ந்து கூறினார். அன்றைய தினம் இரவு, அதிகமான இசைக்கலைஞர்களைக் கொண்ட ஒரு கூட்டத்துடன் யொனாத்தன் இணைந்துகொண்டார். பெரும்பாலும் இளையோராக இருந்த அந்தக்குழுவினர், சீயோன் சதுக்கத்தில் கூடியிருந்தார்கள். கிற்றார் வாத்தியங்களை இசைத்துக்கொண்டு, இஸ்ரேல் மக்களின் பாரம்பரியமான பாடல்களை அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள். அந்த இளையோர் பாடிய பாடல்களில் கவலை உணர்வை வெளிப்படுத்துபவையும் இருந்தன. நம்பிக்கை உணர்வை வெளிப்படுத்துபவையும் இருந்தன. அவற்றில் ஒன்று பீற்றில்ஸ் (Beatles) இசைக்குழுவினரின் “Let it be” என்ற பாடலைத்தழுவிய “Lu Lehi” என்ற பாடலும் இருந்தது. 1973ம் ஆண்டு யொம் கிப்பூர் (Yom Kippur) போர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் நயோமி ஷேமர் (Naomi Shemer) என்பவர் அந்தப் பாடலை எழுதியிருந்தார். போரில் இஸ்ரேல் நிச்சயமாக வெற்றியடையும் என்ற நம்பிக்கையை அந்தப் பாடல் வரிகள் வெளிப்படுத்துகின்றன. அந்தப் பாடல் எழுதப்பட்டுச் சரியாக 50 வருடங்கள் கடந்த நிலையில், மீண்டும் ஒரு தடவை இஸ்ரேல் போரை முன்னெடுத்திருக்கும் தருணத்தில் வியாழக்கிழமை இரவு, சீயோன் சதுக்கத்தில் அந்தப் பாடல் பலமாக ஒலித்துக்கொண்டிருந்தது.
அந்த சதுக்கத்தில் கூடாரங்களை அமைத்துத் தங்கியிருக்கும் பணயக் கைதிகளின் உறவுகள், தமது பிள்ளைகள், உடன்பிறப்புகள், பெற்றோர், பாட்டன், பாட்டிகள் மற்றும் தமது ஏனைய உறவுகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை அந்த இடத்தை விட்டு தாம் அசையப்போவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள். தமது எதிர்ப்பு நடவடிக்கைகள் அரசுக்கு எதிரானவை அல்ல என்று அந்தச் செயற்பாடுகளின் ஒழுங்கமைப்பாளர்கள் குறிப்பிட்ட போதிலும், அவர்களது தற்போதைய விரக்தி உணர்வை மிகவும் தெளிவாகவே அவதானிக்க முடிந்தது.


தமிழில்: ஜெயந்திரன்
நன்றி: CNN.COM