காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிய தாய் ஒருவர் மரணம்

இறுதிப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி பல போராட்டங்களில் கலந்துகொண்ட தாய் ஒருவர் வவுனியாவில் உயிரிழந்துள்ளார்.

2009 இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட செஞ்சுடர் மாஸ்டரின் தாயாரும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேராவின் தாயாரும் ஆகிய தேவகி அம்மா, புற்றுநோயினால் இன்று மரணமடைந்துள்ளார்.

வவுனியாவை வசிப்பிடமாக கொண்ட அவர் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தேடியலைந்திருந்த நிலையில் மகனை காணாமல் மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில், சிறீலங்கா அரச படைகளிடம் கையளிக்கப்பட்டு மற்றும் அவர்களால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா சங்கத்தினர், தேவகி அம்மாவின் மரணத்திற்கு தமது இரங்கல் அஞ்சலிகளை தெரிவிப்பதோடு, தாயாரின் குடும்பத்தினரது துயரிலும் கலந்து கொள்கின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.