ஒல்லிக்குளம் வெடிபொருட்கள் மீட்பு ;14 ஆம் திகதி வரையில் விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது மட்டக்களப்பு,ஆரையம்பதி ஒல்லிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப் பட்டவர்கள் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது மட்டக்களப்பு,ஆரையம்பதி ஒல்லிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

குறித்த முகாமில் சஹ்ரானின் சகோதரர் தங்கியிருந்ததாகவும் பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத்துறையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்துவந்தனர்.

இதனடிப்படையில் நிக்கவரெட்டிய பகுதியை சேர்ந்த ஆறு பேர் குற்றப்புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் நான்கு பேர் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் ஏனையவர்கள் நிகவரெட்டிய பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நான்கு பேரும் இன்று குற்றத்தடுப்பு பிரிவினரால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது மார்ச் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இவர்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத்துறையினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.