இந்திய மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழக மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று காலை சுமார் 300 படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றிருந்த போது, அவர்களில் 54 மீனவர்களை  கச்சத்தீவு அருகே  இலங்கை-இந்திய கடல் எல்லை பகுதியில்  வைத்து கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.

தமிழக மீனவர்களின் இரு  படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து அதில் இருந்த மரியசிங்கம், ராபின்சன், பேசியர், பிராங்கிளின், சுப்ரீஸ், சோனைமுத்து, சக்தி, விஜயன், ரோசாலிஸ், குமார், கெரோனிஸ், மகேசுவரன், ஜான், கதிர், சிவா, அந்தோணி புளூட்டஸ், ராயப்பூ, அஜிரோ உள்பட 54 தமிழக மீனவர்களே இவ்வாறு சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் படகுகளை தாக்கி இலங்கை கடற்படை மூழ்கடித்தது. இதில் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள்  படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.