இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய ராஐபக்க்ஷ -குகதாஸ்

இலங்கை வரலாற்றின் அன்னிய காலணித்துவ பின்னணியை திரும்பிப் பார்த்தால் தற்போது இலங்கை அரசாங்கம் சீனாவுடன் கொண்டுள் உறவை மிக தெளிவாக விளங்கிக் கொள்வதுடன் எதிர்காலத்தில் எவ்வாறான மாற்றங்கள் இடம் பெறப் போகிறது என்பதை உணர முடியும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ்  கூறுகையில்,

“இலங்கையில் முதலாவதாக வந்த போர்த்துக்கேயர் கோட்டை மன்னனை எப்படி வசப்படுத்தி உள் நுழைந்தவர்கள் இறுதியில் டொன்யுவான் தர்மபாலவுடன் ஒப்பம் செய்து கோட்டை ராச்சியத்தையே ஒரு துளி இரத்தம் சிந்தாமல் கைப்பற்றினர்.

போர்த்துக்கேயருடன் தொடர்ந்து போரில் ஈடுபட்ட சிங்கள மன்னர்களுள் இரண்டாம் இராஐசிங்கன் ஒரு கட்டத்தில் போர்த்துக்கேயரை வெளியேற்ற ஒல்லாந்தருடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டான் இதுவே பின்னாளில் சிங்கள மக்களால் இஞ்சி கொடு்த்து மிளகாய் அல்லது மிளகு வாங்கிய கதையாகியது. காரணம் போர்த்துக்கேயர் மோசமானர்கள் அவர்களை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று எண்ணி அவர்களை விட மோசமானவர்களை வரவழைத்தமை அதாவது இஞ்சியை விட காரமான மிளகாயை வாங்கியது போன்ற உவமைக்கு உள்ளானது.

இதே நிலைமைதான் தற்போது  ராஐபக்சாக்களின் நிலைமை அதாவது தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் கோரமாக அடக்கும் போது நடந்த போர்க்குற்றங்கள்,மனிதப் படுகொலைகள் ,இனப்படுகொலைகள் பெரும் பூதமாக ஐக்கியநாடுகள் மனிதவுரிமைப் பேரவையில் உருவெடுத்தமையின் பின்னணியில் இந்திய,அவுஸ்ரேலிய,ஆசிய , மேற்குலக,அமெரிக்க நாடுகள் ஓரணியில் இருப்பதால் அதனை எதிர்க்கும் முகமாக அந்த அழுத்தங்களில் இருந்து தங்களை பாதுகாப்பதற்காகவும் தங்கள் ஆட்சியை தொடர்வதற்காகவும் சீனாவிடம் முழுமையாக சரணடைந்ததுடன் ஒப்பந்தங்கள் பலவற்றை சட்டமாக்கியதுடன் தனியான தீவை நாட்டின் இறைமையை தாண்டி வழங்கியுள்ளனர்.

இங்குதான் இஞ்சி போன்ற தமிழர்களை பகைத்துக் கொண்டு மிளகாய் போன்ற சீனாவுடன் வாழத் தொடங்கியுள்ளனர். இது வரலாற்று ரீதியாக இரண்டாம் இராஐசிங்கனின் கதையாக மாறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆரம்பகாலங்களில் இலங்கையுடன் பட்டுப்பாதையில் வியாபாரங்களில் ஈடுபடும் போது இலங்கைக்கு சீனர்கள் இட்ட பெயர் சீலன் ஆகும் எதிர்காலத்தில் கொழும்பு போர்ட் சிற்றிக்கு சீலன் என்று பெயர் வைத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை” என்றார்.