அதிபரின் ட்விட்டர் பதிவு நீக்கம்: ட்விட்டரையே தடை செய்தது நைஜீரியா

அதிபர் முகமது புஹாரியின் ட்விட்டர் பதிவொன்றை  ட்விட்டர் நிறுவனம் நீக்கியதைத் தொடர்ந்து தங்கள் நாட்டில் ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு தடை விதித்துள்ளது நைஜீரியா அரசு.

கடந்த 1967 முதல் 1970 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 10 லட்சம் பேர் உயிரிழந்தனர். இன்றளவும் பல்வேறு குழுக்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன.

இந்நிலையில், நைஜீரியா அதிபர் முகமது புஹாரி தனது  ட்விட்டரில்    வெளியிட்ட பதிவு ஒன்றில், “அரசுக்கு எதிராக செயல்படும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட இழப்புகள், அழிவுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அரசை எதிர்ப்பவர்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியிலேயே பதில் அளிக்கப்படும்” என கூறியிருந்தார்.

அதிபர் முகமது புஹாரியுடைய இந்த கருத்து நைஜீரியாவில் மீண்டும் உள்நாட்டுப் போரை தூண்டும் வகையில்  இருப்பதாக குற்றம்சாட்டிய ட்விட்டர் நிர்வாகம், அவரது பதிவை நீக்கியது.

இதுகுறித்து அந்த நாட்டு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் லாய் முகமது கூறும்போது,  “நைஜீரியாவில் ட்விட்டரின் செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்பும் வகையில் உள்ளன. காவல்துறை நிலையங்களை எரித்து,  காவல்துறையினரை கொலை செய்வோரின் பதிவுகள், காணொளிகள் ட்விட்டரில் வெளியாகின்றன.

அதேநேரம்   அதிபர் வெளியிட்ட பதிவு நீக்கப்பட்டிருக் கிறது. எனவே எங்கள் நாட்டில் ட்விட்டருக்கு காலவரையின்றி தடை விதிக்கப்படுகிறது” என்றார்.