தண்டனைபெற்றோரை விடுவிப்பது தவறான முன்னுதாரணம்; வலிந்து நீதிமன்றம் வந்த மத்திய அரசு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆளுநர் இதுவரை முடிவு ஏதும் எடுக்கவில்லை. இந்நிலையில், நளினியின் சார்பில் புதிதாக ஒரு மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவில், தன்னை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசு 2018 டிசம்பரிலேயே தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவிட்டதாகவும் ஆனால், அந்தப் பரிந்துரையின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாகவும் கூறியிருந்த நளினி, தான் தற்போது சட்டவிரோதமாக சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். ஆகவே, தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் அதன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜராகி அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதி அனுமதி கேட்டதாகவும் அதற்கு பதிலளித்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி மத்திய அரசு அனுப்பிய பதிலில், அந்தக் கோரிக்கையை நிராகரித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த முடிவு எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் கூறினார்.

இதனை நளினி தரப்பு வழக்கறிஞர் எதிர்த்தார். இந்த வழக்கில் மத்திய அரசு மனுதாரராக இல்லாத நிலையில், தானாக முன்வந்து மனு தாக்கல் செய்திருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, மத்திய அரசை மனுதாரராக இணைத்த நீதிமன்றம், ஜனவரி 28ஆம் தேதிக்குள் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தைத் தெரிவிக்கும்படி கூறியுள்ளது.