ரணில் அரசை காப்பாற்றும் கூட்டமைப்பு கன்னியா விவகாரத்தை புறக்கணித்தது

கன்னியா விவகாரம் உள்ளிட்ட அவசர பிரச்சினைகள் தொடர்பாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தமிழ் தலைமைகள் கலந்துரையாடியிருந்தனர்.

எனினும் இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பங்கேற்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்காவின் அரசுக்கு ஆபத்து வருபாேது அவசரமாக செயற்படும் கூட்டமைப்பு எதிர்பார்த்தது பாேல தமிழ் மக்களின் விவகாரத்தை புறக்கணித்துள்ளது.

இந்த சந்திப்பில் எட்டப்பட்ட முடிவுகள்:

கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவித புதிய விகாரை கட்டுமானப்பணிகள் நடைபெறுவது இடை நிறுத்தம்.

32 பேர் கொண்ட தொல்பொருளாராட்சி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனை சபையில் இருக்கின்ற அனைவரும் சிங்கள பெளத்த வரலாற்றாசிரியர்கள் என்ற நிலைமையை மாற்றி, மேலதிகமாக 5 தமிழ் வரலாற்றாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த தமிழ் வரலாற்றாசிரியர்களின் பங்களிப்புடனேயே இனி புராதன சின்னங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் மனோ சமர்பிப்பார்.

கன்னியா பிரதேசத்துக்குள் தமிழ் இந்துக்கள் நுழைவதை தடை செய்ய தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. இந்த திணைக்களத்தின் சிற்றூழியர்கள் சிலர் இத்தகைய அடாவடி நடவடிக்கையில் ஈடுபடுவதை திணைக்கள பணிப்பாளர் தன் திணைக்கள மட்டத்தில் உடன் தடை செய்ய வேண்டும்.

முல்லை நீராவியடி கோவில் மற்றும் விகாரை அமைந்துள்ள பகுதியில் எந்தவித புராதன சின்னங்களும் அடையாளம் காணப்படவில்லை. அப்படி அங்கே புராதன சின்னங்கள் இருப்பதாக விகாரை தேரர் சொல்வது உண்மைக்கு புறம்பானது என தொல்பொருளாராட்சி திணைக்கள பணிப்பாளர் ஏற்றுக்கொண்டார்.

கன்னியா வெந்நீரூற்று கிணறுகளை பாரமரிக்க, தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு அதிகாரமில்லாததால், அவற்றை அந்த பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார கூறுகிறார். இந்நிலையில் கிணறுகளை பாரமரிப்பது யாரென தீர்மானிக்க ஜனாதிபதி விரைவில் விசேட கூட்டத்தை கூட்டுவார்.

மலைநாட்டில் கோட்லோஜ் தோட்டத்தில் அமைந்துள்ள முனி கோவிலில் பெளத்த கொடியை அங்குள்ள விஹாராதிபதி ஏற்றியது தவறானது. பெளத்த பிக்குகள் சட்டத்தை கையில் எடுப்பது தவறு. இந்த பிக்குக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள் மனோ கணேசன், திகாம்பரம். எம்பீக்கள் திலகராஜ், வேலுகுமார், வியாழேந்திரன் ஆகியோரும், தொல்பொருளாராட்சி திணைக்கள பணிப்பாளர் நாயகம் மாண்டாவேல, இந்து சமய கலாச்சார திணைக்கள பணிப்பாளர் உமா மகேஸ்வரன், அமைச்சர் மனோ கணேசனின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கணேஷ்ராஜா ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

அனைத்து தமிழ் எம்பீகளுக்கும் அவசர கூட்டம் தொடர்பில் தகவல் அனுப்பியும் ஏனைய எம்பீக்கள் எவரும் கலந்துக்கொள்ளவில்லை. அரவிந்தகுமார், ராதாகிருஷ்ணன், ஆறுமுகன் தொண்டமான் ஆகிய எம்பீக்கள் வெளிநாடு சென்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் மனாே கணேசன் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார்.