நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பிணை நீடிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பிணை நீடிப்பு வழங்குவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரில் ஒருவரான நளினி, தன் மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக ஆறு மாதம் பிணை கோரி கடந்த பெப்ரவரி மாதம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் எம.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மலகுமார் விசாரித்தனர். கடந்த ஜுலை 5ஆம் திகதி இந்த வழக்கில் காவல்துறை பாதுகாப்புடன் வேலூர் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட நளினி தானே தனக்காக வாதாடினார்.

அரசு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டுமென்ற அறிவுறுத்தலுடன் ஒருமாத பிணையில் ஜுலை 25ஆம் திகதி வேலூர் சிறையிலிருந்து நளினி வெளியே வந்தார்.

வேலூர் சாத்துவாச்சாரியில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை மேறகொண்டு வரும் நளினி, அதற்கான ஏற்பாடுகள் முடிவடையாத நிலையில் பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்க கோரி தமிழக அரசிடமும், சிறைத்துறையிடமும் ஆகஸ்ட் 8ஆம் திகதி மனு ஒன்றை அளித்திருந்தார். இந்த மனு ஆகஸ்ட் 13இல் நிராகரிக்கப்பட்டது. பின்னர் பிணையை ஒருமாதம் நீடிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை, நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பிணை வழங்குமாறு சிறைத்துறைக்கும், தமிழக அரசிற்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.