மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் அரச காணியென அடையாளப் படுத்தப்பட்டுள்ள காணியை அடைக்கமுற்பட்டவர்கள் பொதுமக்களின் எதிர்ப்பினால் அங்கிருந்துசென்றுள்ளனர்.
இன்று காலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிச்சல் பகுதி காணியை சிலர் அடைக்கமுற்பட்டுள்ளனர்.
இதன்போது அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் ஆகியோர் அதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக காணியை அடைக்கவந்தவர்கள் அங்கிருந்து சென்றதை தொடர்ந்து மக்கள் கலைந்துசென்றனர்.
பல தடவைகள் குறித்த காணியை சிலர் தொடர்ச்சியாக அபகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்த நிலையிலும் மட்டக்களப்பு மாநகரசபையும் அப்பகுதி மக்களும் அவற்றினை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையிலும் சிலர் அக்காணிகளை அடைக்கும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர்.
கிழக்கு மாகாண காணி ஆணையாளரின் சிபாரிசு கடிதத்தினை வைத்துக்கொண்டு குறித்த காணியை அடைக்கமுனைவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த பகுதியானது மட்டக்களப்பில் வெள்ள நிலைமை ஏற்படும்போது நீர்வழிந்தோடும் பகுதியாகவுள்ள நிலையில் அதனை சிலர் அடைக்கமுனைவதனால் எதிர்காலத்தில் பெரும் நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ளநேரிடும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதி அடைக்கப்படுமானால் கல்லடி பாலம் தொடக்கம் காத்தான்குடி வரையான பல பகுதிகள் வெள்ளகாலத்தில் வெள்ளத்தில் மூழ்கும் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.