தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனை, ‘தமிழ் இனத்தின் இறைவன்’ என பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்ததாகவும், போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததாகவும் ரவிகரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“ஆழக் கடல் எங்கும், சோழ மகராஜன் ஆட்சிபுரிந்தானே அன்று
தமிழீழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று
காலை விடிந்ததென்று பாடு
சங்க காலம் திரும்பியது ஆடு”
தமிழ் இனத்தின் தேசியத் தலைவனது ஆட்சியை வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப்பரப்பில் வாழ்ந்த தமிழ் மக்கள் இவ்வாறாகத்தான் கொண்டாடினார்கள்.
மேதகுவின் ஆட்சியில் கடலிலே இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களும் அடாவடிகளும் இருக்கவில்லை. சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இருக்கவில்லை. மீனவர்கள் மகிழ்ச்சியாகக் கடற்றொழிலில் ஈடுபட்டனர்.
காணி அபகரிப்புக்களும் இல்லை. எனவே தமிழர் தாயகம் விவசாயத்திலும் செழித்திருந்தது. போதைப்பொருட்கள் அறவே இல்லை. நள்ளிரவிலும் பெண்கள் சுதந்திரமாக உலவக்கூடிய நிலை இருந்தது. தாயகப்பரப்பில் மக்கள் தன்னிறைவு பெற்று பாதுகாப்பாக வாழ்ந்தனர்.
எனவேதான் தமிழ் மக்கள் மேதகு அவர்களை இறைவனாகவும், அவரது ஆட்சிக் காலத்தினைச் சங்ககாலமாகவும் போற்றுகின்றனர்.
அந்த தமிழ் இனத்தின் இறைவனுக்கு இன்று பிறந்தநாள். இந்த உயரிய சபையிலே மேதகு அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.



