நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான 3 சட்டமூலங்களையும் வாபஸ் பெறுங்கள் : CPA வலியுறுத்தல்!

நிதி கொடுக்கல் வாங்கல்கள் சார்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மூன்று  சட்டமூலங்களையும் அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், ஜனநாயக சுதந்திரத்தைப் பாதுகாப்பதுடன் நிறைவேற்றதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் வகையில் இச்சட்டமூலங்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை வாய்ந்த பரந்துபட்ட கலந்தாலோசனைகளை முன்னெடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அரசாங்கத்தினால் கடந்த வியாழக்கிழமை (9) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்) சட்டமூலம், 2006 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தை திருத்தும் சட்டமூலம் மற்றும் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட பணத்தூயதாக்கலைத் தடுக்கும் (திருத்தம்) சட்டமூலம் என்பன தொடர்பில் எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகிறோம்.

இந்தச் சட்டமூலங்கள் நிதி செயற்பாட்டுப் பணிக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சர்வதேச நியமங்களுக்கு இணங்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பினும், முன்னைய அரசாங்கங்களினால் இவ்வாறான சட்டங்கள் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கும், அவற்றை ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டன.

அதேவேளை இந்தச் சட்டமூலங்கள் தொடர்பில் பொதுமக்களுடனோ அல்லது சம்பந்தப்பட்ட ஏனைய பங்காளிகளுடனோ எவ்வித கலந்தாலோசனைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அத்தோடு சிங்கள, தமிழ் புத்தாண்டு விடுமுறைக்கு முன்பதாக இச்சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதானது, அவற்றை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கான இரண்டு வார காலஅவகாசத்தில் மட்டுப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது.

அதேபோன்று இச்சட்டமூலங்களில் குற்றங்களுக்குப் பரந்த வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருப்பதும், நீதித்துறை மேற்பார்வையின்றி நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு மட்டுமீறிய விசாரணை அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதும் தீவிர கரிசனைக்குரிய விடயங்களாகும்.

அத்தோடு கடந்த காலங்களில் இவ்வாறான சட்டங்கள் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இலக்குவைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பின்னணியில், சர்வதேச கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் நோக்கில் உருவாக்கப்படும் சட்டங்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.

எனவே அரசாங்கம் இந்தச் சட்டமூலங்களை வாபஸ் பெறுவதுடன், ஜனநாயக சுதந்திரத்தைப் பாதுகாப்பதுடன் நிறைவேற்றதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் வகையில் இச்சட்டமூலங்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை வாய்ந்த பரந்துபட்ட கலந்தாலோசனைகளை முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.