“இலத்திரனியல் ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதனை நியமிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் தெரிவித்ததாக ஓர் அனாமதேய செய்தி வெளியிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், “இந்த அனாமதேய செய்தி தொடர்பாக கட்சியின் பேச்சாளர் என்ற வகையில் ஊடகப்பரப்பில் இருப்பவர்கள் என்னுடன் தொடர்புகொண்டு அந்த செய்தி தொடர்பான கருத்துகளைக் கேட்டிருந்தனர்”என்றும் தெரிவித்தாா். இந்த விடயம் தொடர்பாக இதுவரை நடைபெற்ற கூட்டங்கள் எதிலும் கலந்துரையாடப்படவில்லை என்பதையும்,அத்தகைய எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதுடன் எமது யாப்பில் சில மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பிலேயே விவாதித்திருந்தோம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தாா்.
“அதேநேரம் ஆளும்தரப்பு முக்கியஸ்தர்கள் சிலர் தமிழ் கட்சிகள் தனித்தனியே நின்று தீர்வுக்கான கருத்துகளைக் கூறாமல்,ஒன்றுபட்டு ஒரே கருத்தைக் கூறுவார்களாக இருந்தால் அது தொடர்பில் பேசலாம் என்றும் செய்திகளை வெளியிட்டு வருகின்றார்கள்”என்றும் குறிப்பிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், “இது ஒரு வகையில் தமிழ்த் தரப்பின் மீது குற்றங்களைச் சுமத்தி தீர்வை எட்டாமல் செய்வதற்கான அரசின் சாதுர்யமான பிரித்தாளும் தந்திரோபத்தையே காட்டுகிறது”என்றும் தெரிவித்தாா்.



