பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டோம்…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றுவதற்குரிய கட்டத்துக்கு வந்துவிட்டோம். புதிய சட்ட முன்மொழிவு குறித்தும் மக்களிடம் கருத்துகோரும் பணியை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் எனவும் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டார். சட்ட மறுசீரமைப்பு விடயங்களுக்காக நீதி அமைச்சால் பல குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் பயங்கரவாத தடைச்சட்டம் பற்றியது.

இந்நிலையில் மேற்படி சட்டம் பற்றி மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தற்போது மொழி பெயர்ப்பு நடவடிக்கை இடம்பெறுகின்றது. தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதன் பின்னர் மக்களிடம் பெறப்படும்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற உறுதிமொழியை நாம் வழங்கி இருந்தோம். அந்தவகையில் அதனை நிறைவேற்றும் கட்டத்துக்கு வந்துவிட்டோம். அதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.