சட்டவிரோதமான பாகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் மூலம் கடவத்தை, கம்பஹா மற்றும் ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வாகனங்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த வாகனங்களை சட்டவிரோதமாக பொருத்துவதற்கு காவல்துறை மற்றும் முப்படை உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான கடவத்தை , மீகஹவத்த மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, மேலும் 40 சட்டவிரோத வாகனங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை மீட்பதற்காக பல காவல்துறை குழுக்கள் தற்போது விசேட சோதனைகளை ஆரம்பித்துள்ளன.



